ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற பல ஆண்டுகளாகும்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: ரயில்வே துறையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற பல ஆண்டுகள் பிடிக்கும் என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன்சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த விளக்கத்தை ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது. கடந்த 2019 - 2020ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ரயில்வேத்துறை திட்டங்களுக்காக மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன செலவாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவே இதுவரை அறிவிக்கப்பட்டதில் மிகப்பெரிய தொகையாகும். ஆனால் இந்த தொகையை திரட்டி பணிகளை முடிக்க பொதுமக்கள் மற்றும் தனியாரின் முதலீடுகள் கண்டிப்பாக தேவை என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் தனியார் முதலீடு இல்லாமல் பணிகளை முடிக்க இயலாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, இது தனியார்மயமாக்குவதற்கான முயற்சி என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2030ம் ஆண்டு வரையிலான ரயில்வே திட்டங்களை முடிக்க 50 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, கடந்த 2019 ஜூலை 12ம் தேதி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளிக்கும்போது, ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்ற கேள்விக்கே இடம் இல்லை; ரயில்வே துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே தனியாரின் பங்கு கோரப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். ஆனால் சில வழித்தடங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சகத்தின் தற்போதைய விளக்கத்தால் தனியார் மையமாக்களுக்கு சாத்தியம் உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Related Stories: