தேனி: தேனி நகராட்சியில் அல்லிநகரத்தில் உள்ள பசும்புல் தினசரி சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை தொடங்கும் முன்னரே பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலும் தங்களின் உப தொழிலாக ஆடு, மாடு வளர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக தேனி மாவட்டத்தில் மழை சீராக இருந்ததால், பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வெயில் காரணமாக பசுந்தீனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாடுகளுக்கு புண்ணாக்கு, மாட்டுத்தீவனம், பசுந்தீவனம் தான் மிக, மிக அத்தியாவசியமான உணவு. உலர் தீவனங்களை பால் மாடுகளுக்கோ, ஆடுகளுக்கோ வழங்க முடியாது. தேனியில் அல்லிநகரத்தில் பாத்திமா தியேட்டர் சந்திப்பு அருகே தினசரி பசும்புல் சந்தை செயல்பட்டு வருகிறது.