CAA-விற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள சிறுப்பான்மையினரான, இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

 மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாநிலங்கள் சிஏஏ சட்டத்தை திரும்ப  பெறக்கோரி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானங்களும் இயற்றி உள்ளன. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், சிஏஏக்கு எதிராக நாட்டில் நடந்து வரும் வன்முறைகள் நிறுத்தப்படாமல் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தது. இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  ‘சிஏஏ-வுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு,  5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 80 மனுக்களுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது

144 மனுக்கள் மீது முடிவெடுக்கும் வரை சிஏஏ பற்றிய வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: