களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்களை கணக்கெடுப்பு குழுவினர் சேகரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 500 ச.கி.மீ. பரப்பளவில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, யானை, கரடி, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்தாண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இதை களக்காடு வனசரகர் புகழேந்தி தொடங்கி வைத்தார். இப்பணியில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவில் 4 முதல் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. அப்போது செல்போன் ஆப்பை எப்படி பயன்படுத்துவது, படிவங்களில் தகவல்களை பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.