சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை என 50 இடங்களில் தனியார் கல்வி குழுமத்துக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த கல்வி குழுமத்தில் அரசு நிர்ணயித்த கட்டத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தது. மேலும், புதிதாக பள்ளி மற்றும் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் அதிகளவில் பணம் நன்கொடையாக வசூலிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த கல்வி குழுமத்திற்கு சொந்தமான தமிழகம் முழுவதும் உள்ள 50 இடங்களில் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். நேற்று நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில் பலகோடி ரூபாய் வருமானத்திற்கான கணக்குகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதேபோல், இரண்டு வகையான கணக்குகள் பராமரித்து வந்த ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.