×

கார்த்தி சிதம்பரத்தின் மீதான வருமான வரி வழக்கு விசாரணை நிறுத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீதான விசாரணையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில்  முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு   விற்பனை செய்துள்ளனர்.   இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சத்தை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக ஜனவரி 21ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. தங்களுக்கு எதிரான இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்று மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதி வரை நிறுத்திவைத்து உத்தரவிடப்படுகிறது என உத்தரவிட்டு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



Tags : Court ,Karthi Chidambaram , Karthi Chidambaram, Income Tax Case, Icort
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...