10, பிளஸ்2 வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தீர்வு புத்தகம் வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள், தீர்வுப்புத்தகங்களை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தமிழகத்தில் 32 இடங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டன. மாணவர்கள் புதிய பாடப்புத்தகங்களை படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வழக்கமாக அச்சிட்டு வழங்கப்படும் மாதிரி வினாத்தாள் புத்தகம், பிளஸ்2 கணக்கு பாடத்துக்கான தீர்வுப் புத்தகம் தற்போது அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் இவற்றை அச்சிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி மாதிரி வினாத்தாள் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணக்கு பாடத்துக்கு தீர்வுப் புத்தகம் தமிழ், ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தமிழகத்தில் 32 இடங்களில் வினியோகிக்கப்பட உள்ளன. சென்னையில் அரும்பாக்கம் அரசு மேனிலைப்பள்ளி, சேத்துப்பட்டு எம்சிசி மேனிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேனிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கிடைக்கும். இதுதவிர சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்திலும் கிடைக்கும். மேலும் 32 மையங்களிலும் கிடைக்கும்.

* விலைப் பட்டியல்

பிளஸ்2 கணக்கு தமிழ் வழி தீர்வுப்புத்தகம் ரூ.80, ஆங்கில வழிப்புத்தகம் ரூ.80, பிளஸ்2 அறிவியல் குரூப் மாதிரி வினாத்தாள் புத்தகம் ₹60, பிளஸ் 2 கலைப் பிரிவு மாதிரி வினாத்தாள் புத்தகம் ரூ.80, பத்தாம் வகுப்பு அனைத்து பாடத்துக்குமான மாதிரி வினாத்தாள் புத்தகம் ரூ.60 விலையில் கிடைக்கும்.

Related Stories: