சென்னை: பெரியார் ஊர்வலம் தொடர்பாக தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் பெரியார் கலந்துகொண்ட திராவிடர் கழக ஊர்வலத்தில் ராமர், சீதை படங்களை ஆடையில்லாமல் கொண்டு வந்ததாகவும் அதற்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து, அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே, ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் தெரிவித்தனர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் நேற்று காலையில் போராட்டமும் நடந்தது. இதற்கிடையே, பல ஊர்களில் ரஜினிக்கு எதிராக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நேற்று சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டுக்கு முன்பு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியது: சமீபத்தில் நான் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் சொன்னது போன்ற நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். அவுட்லுக் பத்திரிகையில், என்ன நடந்தது என்பதை எழுதி இருக்கிறார்கள். அந்த ஊர்வலத்தில், ராமர்-சீதையை உடை இல்லாமல் செருப்பு மாலை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இதிலேயே (பத்திரிகை நகலை காட்டுகிறார்) வந்திருக்கிறது. இல்லாத விஷயத்தை நான் ஒன்றும் சொல்லவில்லை. கற்பனையாகவும் சொல்லவில்லை. மற்றவர்கள் சொன்னதையும், இதில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். அங்கு அப்போது தர்ணா நடத்திய லட்சுமணனும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
நான் இல்லாத ஒன்றை சொல்லியிருக்கிறேன் என்று சர்ச்சையாகி இருக்கிறது. கேள்விப்பட்டதையும், பத்திரிகைகளில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தமும் தெரிவிக்க முடியாது என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.இவ்வாறு ரஜினிகாந்த் பேசி முடித்ததும் பத்திரிகையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர். வீட்டை முற்றுகையிடும் போராட்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். உங்களுடைய அரசியல் வருகைக்கு பயத்தை உருவாக்கும் முயற்சியாக இதை பார்க்கிறீர்களா?ரஜினி: இதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.திருமாவளவன் உள்பட பலர், இது தவறான கருத்து என்று சொல்லியிருக்கிறார்களே.ரஜினி: நான்தான் தெளிவாக பதிலளித்து விட்டேனே. அந்த தருணத்தில் இருந்தவர்கள் கூட ஆதாரத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்களே. நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள்.மூடநம்பிக்கைக்கு எதிரான பேரணிக்குத்தான் செருப்பு வீசினார்கள் என்கிறார்கள். வரலாற்றை ரஜினி மாற்றி பேசுகிறார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறதே?ரஜினி:தெளிவாக சொல்லிவிட்டேன். நீங்களே மறுபடியும் கிளறுகிறீர்கள். அதிருப்தியான சில சம்பவங்களை மறுபடியும் மறுபடியும் நாம் பேசக்கூடாது. இது மறுக்கக்கூடிய சம்பவம் அல்ல. மறக்கக்கூடிய சம்பவம். இவ்வாறு ரஜினிகாந்த் பதிலளித்தார்.