4 வயது பெண் குழந்தையை தாக்கி மது குடிக்க வைத்த கொடூர தாய்: உடன் இருந்த கள்ளக்காதலன் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் அருகே பெலத்தூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (27). கூலி வேலை செய்யும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, நயினாஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசிக்கிறார். நந்தினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அசோக்(28) என்பவருக்குமிடையே கடந்த 9 மாதமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவர் திருமணம் ஆகாதவர். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இருவருக்கும் மது குடிக்கும் பழக்கமும் உண்டு. உல்லாசம் அனுபவிக்கும் முன் இருவரும் குடிப்பார்கள். இதற்கு குழந்தை நயினாஸ்ரீ இடையூறாக இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இருவரும் மது குடித்தபோது, குழந்தை நயினாஸ்ரீ அழுதுகொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் குழந்தையை அடித்துள்ளனர். பின்னர் மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளனர். மதுவை குடித்த குழந்தை ரத்தவாந்தி எடுத்து மயங்கியது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஓசூர் மகளிர் போலீசார் நந்தினியையும், அசோக்கையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அசோக்கை போலீசார் நேற்று கைது செய்தனர். நந்தினி போலீஸ் கண்காணிப்பில் குழந்தையின் அருகில் மருத்துவமனையில் உள்ளார். அவரிடமும் விசாரணை நடக்கிறது. கைதான அசோக் குழந்தையை அடித்தது உண்மைதான் என்றும் சிறிதளவில் மது கொடுத்ததாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: