×

10ம் வகுப்பு சமூக அறிவியலில் சர்ச்சைக்குரிய பாடப்பகுதி: தாள் ஒட்டி மறைக்க சிஇஓக்களுக்கு உத்தரவு

நாகர்கோவில்: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் பள்ளி கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தொகுதி-2 பக்கம் 50-ல் “அதே போன்று இந்து மகா சபா மற்றும் ராஷ்டிரிய சுவயம் சேவக் சங் ஆகியன முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தன” என்றும் இது போன்று ஆங்கிலத்திலும் இடம் பெற்றுள்ளது என தெரிவித்து பி.சந்திரசேகரன் என்பவரால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு 10.01.2020 அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்குறிப்பிட்ட வாசகம் சார்ந்த பாடக்குறிப்பு அடுத்ததாகப் பாடப்புத்தகம் அச்சிடும்போது நீக்கம் செய்யப்படும் என அரசு வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்டு தற்போது வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள இப்பகுதிக்கு மேலே தாளை ஒட்டி மறைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரத்தை உறுதி ஆவணமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக 22ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப்புத்தகத்தில் உள்ள இப்பகுதிக்கு மேலே தாளை ஒட்டி மறைக்க வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வி இயக்குநர் சார்பில், ‘மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை உடன் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்’ என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CEOs , 10th Class, Social Sciences, Controversy, Course, Sheet, CEO, Directive
× RELATED மே 3ம் தேதி தொடங்க உள்ள பிளஸ்2...