மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்த புலியால் பரபரப்பு

சத்தியமங்கலம்: தமிழகத்தில் சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை மற்றும் களக்காடு முண்டந்துறை என 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அதிக பரப்பளவுள்ள வனப்பகுதியை உள்ளடக்கி உள்ளது. 1,411 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என 2 வனக்கோட்டங்களும், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், விளாமுண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி என 10 வனச்சரகங்களும் உள்ளன.

இது 2013ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டபின் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள மாயாறு ஆற்றுப்படுகை வனப்பகுதி, தெங்குமரஹாடா வனப்பகுதி, தலமலை, கேர்மாளம், ஜீரஹள்ளி மற்றும் பண்ணாரி வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் உள்ளது. தலமலை வனப்பகுதியில் உள்ள திப்புசுல்தான் சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டத்தை மலை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலமலை அருகே திப்புசுல்தான் சாலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் புலி ஒன்று ஹாயாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வனச்சாலையோர வனப்பகுதிகளில் தற்போது புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சாலையில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என மலை கிராமங்களை சேர்ந்த மக்களிடம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: