×

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும்: திமுக அவசர செயற்குழுவில் 6 தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் திமுக அவசர செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வி அடைந்த இடங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, இக்கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

* இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

* என்.ஆர்.சி., என்.பி.ஆர். திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

* உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி உள்ளிட்ட 6 முக்கிய தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவின் முகமூடியை கிழித்தெறிய சபதம் ஏற்போம் என திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. என்.பி.ஆர் என்.ஆர்.சி.,யை அதிமுக அரசு கண்மூடித்தனமாக ஆதரித்து துரோகம் இழைக்கிறது என கூறியுள்ள திமுக, குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் அதிமுக வஞ்சக நாடகம் நடத்தியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளது. எனவே, அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளும் அதிமுக அரசின் தோல்விகள் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட பட்டியலை மக்களிடம் கொண்டு சேர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Tags : Corporation ,elections , DMK, Executive Committee, MK Stalin, Resolution
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...