பேரறிவாளன் வழக்கு தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால், அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தனது மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பான விசாரணையில் ராஜீவ்காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு தொடர்பாக புதிய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையில் எந்த திருப்தி  இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.

நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்பொழுது,பெல்ட் குண்டு தொடர்பாக  புதிய தகவலை பெற முடியவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வெடிகுண்டு தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ புதிய அறிக்கையை தாக்கல் செய்ததா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளனின் விடுதலை தாமதமாவதற்கு என்ன காரணம் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட  முடிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

Related Stories: