நிரந்தர வெள்ளதடுப்பு, காவிரி வடிநில கட்டமைப்பு மேம்படுத்த சென்னையில் 14 ஆயிரம் கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கி நிதி

* 6 பேர் கொண்ட குழு டெல்லி பயணம்

சென்னை: மழைக்காலங்களில் வெள்ளம் போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து 3 ஆயிரம் கோடி செலவில் வெள்ள தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், முதற்கட்டமாக 240 கோடி செலவில் அடையாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய், ஆரணியாறு உபவடிநிலத்துக்குட்பட்ட ஏரி, குளங்கள், கால்வாய்களை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, விரைவில் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.  இந்த நிலையில் நிரந்தர வெள்ளதடுப்பு திட்டத்தை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாசனப்பரப்புக்கு இல்லாத ஏரிகளை ஆழப்படுத்துதல், மூடுதளத்துடன் மழை நீர் வடிகால்வாய்கள் அமைத்தல், கால்வாய்களை அகலப்படுத்துதல், புதிதாக கால்வாய்கள் அமைத்தல், நீர்த்தேக்கம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 200 ஏரிகள், 15 பாலங்கள், 50 கால்வாய்களை அகலபடுத்துதல், 7 இடங்களில் தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 2,400 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த பணிகளுக்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியில் (ஏஐஐபி) கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ஜெகன்நாதன், சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று டெல்லி சென்றுள்ளனர். அவர்கள், இன்று மற்றும் நாளை நடைபெறும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் 11 ஆயிரம் கோடி செலவில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள கீழ் கொள்ளிட உப வடிநிலம் கல்லணை கால்வாய் உபவடிநிலம் மற்றும் கட்டளை உயர்மட்ட கால்வாய் திட்டம், கீழ்பவானி திட்டம் மற்றும் நொய்யல் திட்டம் ஆகியவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்தி புனரமைத்தல் பணிகளுக்கும் நிதி கேட்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்த வங்கி ஒப்புதல் கிடைத்தவுடன் அனைத்து பணிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: