சென்னை: பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அரசின் ஒப்புதலின்றி மீத்தேன் திட்டம் செயல்படுத்த முடியாது என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறினார். எதிர்காலத்திலும் இந்த விவகாரத்தில் மாநில அரசு அனுமதி அளிக்காது.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத் தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். குடமுழுக்கு சிறப்பாக நடைபெறுவதற்கு நிதி ஒதுக்கீடு உள்பட அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் அரசு வழங்கி வருகிறது. இது தனிப்பட்ட நபர் எடுக்கும் முடிவல்ல. இது கொள்கை முடிவு. அரசு நல்ல முடிவு எடுக்கும். ஒரு வாரஇதழ் விழாவில், பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை அவர் தவிர்த்திருக்கலாம். பத்த வச்சுட்டியே பரட்ட, என்பது போல அவரது கருத்து தற்போது பற்றி எரிகிறது. எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும்? என்று யோசிக்க வேண்டும். அதுவே ஆக்கப்பூர்வமான விஷயமாக இருக்கும். கடந்த காலத்தை பற்றி, பழமையை பற்றி பேசி பின்னுக்கு போய்விடக்கூடாது. இதுவே என் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.