×

உள்ளாட்சி தேர்தலில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் தர முடியுமா?

* மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்த பகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும், தள்ளிவைக்கப்பட்டுள்ள ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்த கோரியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணக்கு வந்தது.அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சேலம், கரூர் உள்ளிட்ட ஒன்றியங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

போதிய ஒன்றிய கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அதிகாரிகளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணத்தினால் 10 ஒன்றிய தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.அதேபோல, மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தான் பரிசீலிப்பார்கள் என்றும் திமுகவின் மனு விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது, திமுக சார்ப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மறைமுக தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் கூறுவது பொய். ஆணையத்தின் இந்த வாதத்தை ஏற்கமுடியாது.  விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலின் போது அதிமுக பிரமுகர் டிஎஸ்பி வெங்கடேசனை அரிவாளால் தாக்கியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. மறைமுக தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்று வாதிட்டார்.

இதைகேட்ட நீதிபதிகள், தேர்தலின்போது பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டார்.இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மாநில தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வதற்காகத்தான் தேர்தலில் சிசிடிவி கேமரா பயன்படுத்தப்பட்டது. தற்போது வரை சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. சிசிடிவி பதிவுகள் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிசிடிவி காட்சிகளில் முறைகேடு நடத்த வாய்ப்புள்ளதா என்று ஆணையத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்கிறோம் என்று வாதிட்டார்.இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : elections ,CCTV , CCTV camera recordings, local elections guarantee , no abuse?
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...