சென்னை: வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலையில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம் என்பது தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி அரசின் பொய்மலை தகர்ந்துவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையை விட வேலையில்லாப் பட்டதாரிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இப்படி தற்கொலை செய்து கொள்வோர் பட்டியிலில் அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடம். தொழில் பெருகிவிட்டது, வேலைவாய்ப்பு பெருகிவிட்டது, அந்நிய முதலீடுகளை ஈர்த்து விட்டோம் என்ற எடப்பாடி அரசின் பொய்மலை தகர்ந்து விட்டது. மத்திய அரசு விருது பெற்றதாக மகிழ்ந்த முதல்வர், மத்திய அரசின் இந்த புள்ளி விவரம் பார்த்து முகத்தை எந்தப் பக்கம் வைத்துக் கொள்வார்? இவ்வாறு மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.