புழல்: புழல் கால்பந்து வெல்பேர் சங்கத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புழல் தந்தை சிவராஜ் விளையாட்டு திடலில் ஒரு நாள் எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் புழல், மணலி, மாதவரம், மாங்காடு, வல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்டன. இறுதியில் புழல் ‘ஏ’ அணி முதலிடத்தையும், ‘பி’ அணி 2வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு அதே திடலில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதலிடம் பிடித்த அணி தலைவருக்கு கோப்பையுடன் எல்இடி டிவி, 2வது அணி தலைவருக்கு பிரிட்ஜ், மற்ற அணியினருக்கு மின்விசிறிகளை புழல் பகுதியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பரிசாக வழங்கினர்.
இதேபோல் சோழவரம் கால்பந்து குழு மற்றும் பியூல் கால்பந்து விளையாட்டுக் குழு இணைந்து, நேற்று முன்தினம் சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சோழவரம், புழல், பாடியநல்லூர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஒரகடம், சென்னை, பெரம்பூர் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன. முடிவில் புழல் அணி முதலிடத்தையும், பாடியநல்லூர் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணியினருக்கு சோழவரம் கால்பந்து விளையாட்டு அகாடமி நிறுவனர் பிரான்சிஸ் சேவியர் நினைவு கோப்பை மற்றும் வீரர்களுக்கான பரிசுகளை உடற்கல்வி ஆசிரியர் சோழவரம் மதன் வழங்கினார். இதில் பயிற்சியாளர்கள் இதயவர்மன், நிர்மல், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.