புதுடெல்லி: ஏஜிஆர் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரி, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளன. ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். அதோடு, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றை பயன்பாட்டுக்கான கட்டணம், ஈவுத்தொகை மற்றும் சொத்து வருமானம் உள்ளிட்டவை சரிகட்டப்பட்ட நிகர வருவாயாக கணக்கிடப்பட்டு, அதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதன்படி, வோடபோன் நிறுவனம் ரூ.53,039 கோடி, ஏர்டெல் ரூ.35,586 கோடி மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது.