ஆழியாறில் ஒற்றை யானை நடமாட்டம்: சுற்றுலா பயணிகள் பீதி

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, நவமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடமான், காட்டு மாடு, காட்டு யானை, செந்நாய், சிறுத்தை, உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மலைப்பகுதி ஒட்டியுள்ள ஆழியாறு அணைக்கு வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வந்து செல்கின்றன. தற்போது மழை குறைந்து உள்ளதால் வனப்பகுதியில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி கடந்த சில தினங்களாக வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், ஆண் காட்டு யானை ஒன்று குரங்கு அருவி ஒட்டியுள்ள ஆழியாறு அணைக்கு காலை, மாலை நேரங்களில் வந்து செல்கிறது. இந்த யானை கடந்த மாதம் நவமலை பகுதியில் ஆழியாறு அணையில் நீந்தி, சின்னாறுபதி பகுதிக்கு வந்து சுற்றித்திரிந்தது.

அவ்வப்போது ஆழியாறு நவமலை ரோட்டை கடந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வந்து செல்கிறது. இந்நிலையில், நேற்று ஒற்றை யானை ஆழியாறு குரங்கு அருவி அருகிலும், நவமலை ரோட்டிலும் சுற்றித்திரிந்தது. இதனால், ஆழியாறு வந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். யானையை வனத்திக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

Related Stories: