குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது: பிப்.19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான விண்ணப்ப பதிவும் ஆன்லைனில் தொடங்கியது. இந்த வருடத்தில் நடைபெறும் முதல் குரூப் தேர்வு இதுவே ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 1ம் தேதி, குரூப் 1 தேர்வு பற்றிய குறு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிலை பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. இன்று வெளியிட்டது. இதையடுத்து தேர்வர்கள் இன்று முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். குரூப் 1 தேர்விற்கான தகுதி இட ஒதுக்கீடு தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in ஆகிய இணைய தளங்களில் பார்த்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, கல்வித்தகுதி, தேர்வு திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விபரங்கள் ஜனவரி 20ம் தேதி வெளியாகும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த கூடுதல் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து, குரூப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, போட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கு, குரூப் 1 தேர்வு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: