மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்: முதற்கட்டமாக 25 சிலாப்புகள் அமைப்பு

மதுரை: மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடத்தை சுற்றி சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடி செலவில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018-ம் ஆண்டு ஜுன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம், மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக இரண்டு மாதத்திற்கு முன்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இப்பகுதியில் உள்ள மொத்த பரப்பளவான 250 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக தமிழக வருவாய்த்துறை மூலம் ஏற்கனவே 224. 24 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவமனை அமைய உள்ள பகுதியின் வரைபடம் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனை கட்டிடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக, பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 12 அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட சிலாப்கள் தயாரிக்கப்பட்டு சுற்றிலும் பதிக்கப்படும் எனவும், இதற்காக 1500 சிலாப்கள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 25 சிலாப்புகள் ஏய்ம்ஸ் அமைவிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைகான சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக 5.5 கி.மி சுற்றியும் 6 அடி நீளம் கொண்ட பள்ளங்கள் தொண்டப்பட்டு கான்கிரீட் கலவைகளினால் நிறப்பட்டுள்ளது. அதன் மேல் 10 அடி உயரம் கொண்ட கான்கிரீட் சிலாப்புகள் பொருத்தப்பட உள்ளது. தற்போது வரை 25-க்கும் மேற்பட்ட கான்கிரீட் சிலாப்புகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: