தூத்துக்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் மக்கள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டாதது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மக்கள் கருத்தை கேட்காதது வருத்தமளிப்பதாகவும் அவர், தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்திருந்த கனிமொழி, செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு பேசினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் தொடர்ந்து வலுவாக எதிர்த்து வந்தாலும் அதை மத்திய அரசு செயல்படுத்த நினைப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் கூட அரசாங்கம் மக்களுடைய கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சுற்றுப்புற சூழலை பற்றி தங்களுக்கு அக்கறை இல்லை என்ற முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.