×

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி: தூக்குத்தண்டனை உறுதி!

புதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியில் நிர்பயா என்ற 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, பின்னர் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இரவு நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்கு பின் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பாக ராம் சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங் தாகூர், ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு, மீதமுள்ள முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. பின்னர் இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. அதன்பிறகு, மரண தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பவன் குப்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவில், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பவம் நடந்த போது தான் சிறுவன் என்றும் எனவே சிறார் சட்டத்தின் பலனை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, பவன் குப்தா மனுவை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. பவன் வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பவன் குப்தா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதுகுறித்து பவன் குப்தா தாக்கல் செய்த மனுவில், 2012ல் நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது தமக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று குறிப்பிட்டிருந்தான். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் பவன் குப்தாவின் தூக்குத்தண்டனை உறுதியாகியுள்ளது.


Tags : Pawan Gupta ,murder ,Nirbhaya , Nirbhaya Case, Pawan Gupta, death sentence, appeal, Supreme Court
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...