நாகர்கோவில்: எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரையும் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொள்ளப்பட்ட வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் நீதிமன்ற காவல்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதன் அடிப்படையில் இன்றுடன் 3 நாட்கள் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டத்தின் பேரில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதிகள் அருள்முருகன் அமர்வு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அச்சமயம் 2 பேரை 28 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர கோரி காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோரின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து, அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதித்தால் காவல்துறையினர் அவர்களை சுட்டு கொன்றுவிடுவார்கள் என 2 பேரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாளை மாலை 3 மணிக்கு இதற்கான தீர்ப்பினை வழங்குவதாக கூறியுள்ளார். அதுவரையிலும் அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டனர்.