×

மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பாஜக அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு, தனியார் நிறுவனமான வேதாந்தா குழுமம் மற்றும் ஓஎன்ஜிசி பொதுத்துறை நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களை திசைத்திருப்ப எதிர்க்கட்சிகள் முயல்கிறது என்று தெரிவித்தார். மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காது என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது என்று கூறினார்.

துக்ளக் பொன்விழாவில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பத்தவச்சிட்டியே பரட்டை என்பதைப்போன்று பழைய கருத்துக்களை பேசி பிரச்சனையை எழுப்பக்கூடாது என்றும், எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக பேசவேண்டும் என்றும் கூறினார்.


Tags : government ,Tamil Nadu ,Minister Jayakumar , Tamil Nadu government will not support any project that people do not like: Interview with Minister Jayakumar
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...