×

கோவிந்தம்பாளையம் பகுதியில் கட்டுமான பணிகள் முடிந்தும் திறக்கப்படாத நூலக கட்டிடம்

கரூர்: கரூர் கோவிந்தம்பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ஊர்ப்புற நூலக கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி பகுதியில் கோவிந்தம்பாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பகுதி மக்கள் நலன் கருதி பொதுநூலகத்துறையின் சார்பில் ஊர்ப்புற நூலகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் ஊர்ப்புற நூலகம் ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கி வந்ததால் புதிய கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில், இந்த நூலகத்திற்கு எதிராகவே புதிதாக நூலக கட்டிடம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து திறக்கப்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நூலக கட்டிடத்தை திறந்து வைத்து ஊர்ப்புற நூலகம் இங்கு செயல்படுவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி புதிய கட்டிடத்தை விரைவில் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Unpacked Library Building ,Govindampalayam Library Building , Library Building
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...