×

தன் மீதான அவதூறு வழக்கை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விரும்பிய விஜயகாந்த்..: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தன் மீதான அவதூறு வழக்கை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விரும்பிய விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது தமிழக அரசு பல்வேறு அவதூறு வழக்குகளை தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் அவதூறு வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டது தொடர்பான உத்தரவை அரசு பிறப்பித்தது. இதையடுத்து, இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்வதற்காக தொடரப்பட்ட வழக்குகள், விஜயகாந்த் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக தமிழக அரசு சார்பில் தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த அவதூறு வழக்கை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி கோரினார். ஆனால், மேல்முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது நீதிமன்ற நேரத்தை வீனடிப்பது போன்றது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இதற்காக அபராதம் விதிக்கலாம் என விஜயகாந்த் தரப்பிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த், பேசிய பேச்சுகள் அவதூறானவையே என தெரிவித்த நீதிபதிகள், எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று துணை குடியரசு தலைவர் தெரிவித்த கருத்துகளையும் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமல்லாது, அரசியல் சூழ்நிலைகளை பற்றி விவாதிக்கும் இடம், இது இல்லை என தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விஜயகாந்த தரப்பிற்கு அனுமதி அளித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொண்டதை அடுத்து அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாக கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்று செயல்படக்கூடாது என்று விஜயகாந்த் தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.  



Tags : revocation ,Vijayakanth ,withdrawal ,HC , Vijayakanth, Tamil Nadu Government , defamation case, Madras High Court
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...