சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நிறைவடைந்ததையடுத்து ஏராளமானோர் நேற்று சென்னைக்கு திரும்பினர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக, சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள், ரயில்கள், ஆம்னி பேருந்துகளில் வாயிலாக சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணித்துள்ளனர். இதனால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்ற பலரும் மீண்டும் சென்னைக்கு திரும்ப துவங்கி உள்ள நிலையில் நேற்றும், நேற்றுமுன்தினமும் அதிகமாக இருந்தது. இவர்களின் வசதிக்காக பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு கடந்த 16ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.