×

அம்பத்தூரில் துணிகரம் டாக்டர் வீட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

ஆவடி: அம்பத்தூரில் டாக்டர் வீட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மணி (72). அரசு துறையில் ஓய்வு பெற்ற டாக்டர். தற்போது, இவர் ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புஷ்பா, தனது மகன், மருமகளுடன் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதிக்கு சுற்றுலா சென்றார். மேலும், மணி வீட்டை பூட்டி விட்டு ஆந்திராவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று காலை மணி ஆந்திராவில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 சவரன் தங்க நகைகள், ரூ.20ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன. வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த 25சவரன் தங்க நகைகள் கொள்ளையர்களின் கண்ணில் படாமல் தப்பியது.

இது குறித்து டாக்டர் மணி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டு கதவு, பீரோ ஆகியவற்றிலுள்ள கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : mystery persons , Ambattur, doctor's house, broken, 45 shaving jewelry, robbery
× RELATED திருச்சி ஒத்தக்கடையில் அதிகாலையில்...