×

சுலைமானியை கொன்றது குறித்து டிரம்ப் வர்ணனை 30 நொடி... 10... 9... 8... 0... அவ்ளோதான் முடிஞ்சது கதை

புளோரிடா: ஈரான் ராணுவ தளபதியை அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது ஏன் என்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 3ம் தேதி ஈராக் சென்ற ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அமெரிக்கப்படை டிரோன் தாக்குதல் நடத்தி கொன்றது. அவருடன் ஈராக் துணை தளபதியும் பலியானார். இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பின்னர், உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, போர் பதற்றத்தை இருநாடுகளும் குறைத்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஆளும் குடியரசு கட்சியின் பிரசாரத்துக்கு நன்கொடை திரட்டும் நிகழ்ச்சி, புளோரிடாவின் பாம் பீச் பகுதியில் உள்ள கிளப்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 10 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கெடை அளிக்கப்பட்டது. அப்போது, நன்கொடையாளர்களிடம் சுலைமானி மீதான தாக்குதல் சம்பவத்தை அதிபர் டிரம்ப் பெருமையாக விவரித்தார். அப்போது அவர் பேசியதாவது: நம் நாட்டை பற்றி சுலைமானி மிக மோசமாக பேசினார். எவ்வளவுதான் நம்மால் கேட்டு கொண்டிருக்க முடியும்? அதனால், அவரை கொல்ல உத்தரவிட்டேன்.

சுலைமானி மீதான டிரோன் தாக்குதலை வெள்ளை மாளிகையின் கண்காணிப்பு அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துக் கொண்டே இருந்தனர். ‘இருவரும் ஒன்றாக உள்ளனர், சார்’ என்று முதலில் கூறினர். அடுத்து, ‘சார், அவர்களுக்கு 2 நிமிடம் 11 வினாடிகள்தான் உள்ளது. அவர்கள் காரில் உள்ளனர் சார். அது கவச வாகனம் சார்...’ என்றனர். அடுத்து, ‘இன்னும் ஒரு நிமிடம்தான் அவர்கள் உயிரோடு இருப்பார்கள்’ என்றனர். ‘30 நொடிகள், 10 நொடிகள், 9, 8.. என கவுன்ட் டவுன் தொடங்கியது. திடீரென்று டமார் சத்தம். ‘அவர்கள் காலி சார்’ என்றனர். இதுதான், நான் கேட்ட கடைசி தகவல். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

*கடலுக்கு சுற்றுச்சுவர் முட்டாள்தனமானது
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சமீபகாலமாக அடிக்கடி புயல் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதனால், பேரிடர்களில் இருந்து நியூயார்க் நகரை பாதுகாக்க ஆறு மைல் தொலைவிற்கு கடற்கரையை சுற்றி சுவர் எழுப்ப அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ₹8.45 லட்சம் கோடி செலவாகும் என்றும், இதனை கட்டி முடிக்க 25 ஆண்டுகளாகும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `200 பில்லியன் டாலர் செலவில் சுற்றுச் சுவர் எழுப்புவது முட்டாள் தனமானது. சுற்று சூழலுக்கு எதிரான திட்டமும் கூட. புயல் நேரத்தில் இத்திட்டத்தினால் எந்த பயனும் இருக்காது. எனவே, இத்திட்டத்தை பற்றிய உங்களின் எண்ணத்தை கைவிடுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Trump ,Suleiman , Suleimani, killed, Trump commentary, 30 sec ... 10 ... 9 ... 8 ... 0 ..., story
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...