புளோயம்போன்டீன்: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்தியா யு-19 அணி இலங்கை யு-19 அணிக்கு எதிராக 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்த தொடரில் இந்தியா யு-19 அணி நேற்று தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை யு-19 அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய இந்திய இளைஞர் அணி வீரர்கள் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தனர்.ஜெய்ஸ்வால் 59, சக்சேனா 23, திலக் வர்மா 46, கேப்டன் பிரியம் கார்க் 56 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஜுரெல் 52 ரன், சித்தேஷ் வீர் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை யு-19 அணி களமிறங்கியது. இந்த அணி 45.2 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 90 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய யு-19 அணி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது.