அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு: பள்ளி பாடதிட்டத்தில் ஜல்லிக்கட்டை சேர்க்க முடியாது

ஈரோடு:  ‘‘ஏற்கனவே பாடச்சுமை உள்ள  நிலையில்  ஜல்லிகட்டை பாடதிட்டத்தில் சேர்க்க முடியாது’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார்.

ஈரோடு  மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தில் நேற்று காளிங்கராயன் சிலைக்கு பள்ளி கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர், கோபி   பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: 5 மற்றும் 8ம் வகுப்பு  பொதுத்தேர்வுக்கான  மையத்தை மாற்று பள்ளிகளில் அமைக்க உள்ளதாக வந்த  தகவல்கள் தவறானது. அவ்வாறு  பள்ளி கல்வித்துறை சார்பில் எவ்வித முடிவும்  எடுக்கவில்லை.

மத்திய அரசின்  கேந்திர வித்யாலயா பள்ளிகளை  ஒவ்வொரு தாலுகாவிலும் அமைப்பது குறித்து உச்ச  நீதிமன்றம் ஆலோசனை  தெரிவித்து இருந்தாலும், இது அரசின் கொள்கை முடிவு.  அதனால் இது குறித்து  முதலமைச்சரே முடிவெடுப்பார். ஏற்கெனவே பாடச்சுமை உள்ள  நிலையில்  ஜல்லிகட்டை பாடதிட்டத்தில் சேர்க்க முடியாது. ஜல்லிக்கட்டு  தகவல்கள்  குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். பெரியார் குறித்து  ரஜினி  கூறிய கருத்துக்கு ரஜினிகாந்த்தான் விளக்கமளிக்க வேண்டும்.  விசைத்தறியில்  பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்வது குறித்து அந்த துறை  அமைச்சர் தான்  முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: