வேலூர் கோட்டை வெளி பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 3 பேர் கும்பல் வெறிச்செயல்

வேலூர்: வேலூர் கோட்டை வெளி பூங்காவில் காதலனை தாக்கி இளம்பெண்ணை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில், காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை செய்கிறார். நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலித்து வந்தார்களாம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடிந்ததும் சுமார் 9 மணியளவில் வேலூர் கோட்டை வெளி பூங்காவுக்கு சென்றனர். அங்கு அகழி அருகே அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். அப்போது அங்கு வந்த 3 பேர், காதல் ஜோடியை திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் இருந்து, நகை, செல்போன் பறித்தனர். பின்னர் காதலனை சரமாரியாக தாக்கி விரட்டி விட்டு 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அவர் அலறி கூச்சலிட்டும், ஒதுக்குப்புறமான பகுதி என்பதால் சத்தம் வெளியில் கேட்கவில்லை. பின்னர் வெளியே ஓடி வந்த காதலன் வேலூர் வடக்கு போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக நேற்று காலை இளம்பெண்ணின் காதலனை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து சென்று, 3 மர்ம ஆசாமிகள் எந்த வழியாக வந்து, தப்பி சென்றனர் என விசாரணை நடத்தினர். அங்கு சிதறியிருந்த ரத்த மாதிரிகளையும், குற்றவாளிகள் வீசிச் சென்ற பொருட்களையும் சேகரித்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குபதிந்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாநகரின் மையப்பகுதியில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் குற்றங்கள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சிறுமிகள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை புகார் அதிகரித்தது. இதுகுறித்து 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 17 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: