கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் கெலாட் முடிவு

ஜெய்ப்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர ராஜஸ்தான் அரசும் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காக, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளா, பஞ்சாப் சட்டப்பேரவைகளில் இச்சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் பட்ஜெட் கூட்டத் தொடர் 24ம் தேதி தொடங்குகிறது.  முதல் நாள் அன்றே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற, ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இச்சட்டத்துக்கு எதிராக மாநில முதல்வர் அசோக் கெலாட் ஏற்கனவே அமைதி பேரணி நடத்தினார். ‘இச்சட்டம் நடைமுறைக்கு உகந்தது அல்ல. இதை அமல்படுத்த முடியாது,’ என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இதனால்தான், கேரளா, பஞ்சாப் பாணியில் தனது மாநில சட்டப்பேரவையிலும் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

Related Stories: