வயநாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை: ராகுல்காந்தி கோரிக்கை

புதுடெல்லி: கேரள மாநிலம் வயநாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க, அந்த தொகுதியின் எம்பியான ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வயநாடு மக்களவைத் தொகுதியில் ஒரு மெகா உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்குமாறு மத்திய மற்றும் கேரள அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, மத்திய உணவு பதப்படுத்தும் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் மற்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோருக்கு தனித்தனியாக எழுதிய கடிதங்களில், ராகுல்காந்தி இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.

மேலும், ‘‘வயநாடு மக்களவை தொகுதியில் மகத்தான வேலைவாய்ப்பு மற்றும் விவசாய பன்முகத்தன்மை உள்ளது. காபி, தேநீர் மற்றும் இஞ்சிக்கு தேவை இருக்கும்போது, இப்பகுதியில் போதுமான சந்தைப்படுத்தல் மற்றும் உணவு பதப்படுத்தும் வசதி இல்லை. எனவே வயநாட்டில் மெகா உணவுப் பூங்கா அமைக்க வேண்டும். இதற்கான ஒரு திட்டத்தை மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்’’ என்று ராகுல் கூறியுள்ளார்.

Related Stories: