இலங்கை ராணுவத்துக்கு நிதி உதவி செய்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது: ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன. 20: இலங்கை ராணுவத்துக்கு நிதி உதவி வழங்குவது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இலங்கை ராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும். இந்த நிதியை ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள அரசு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.

ஈழத்தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு அளித்த உறுதியை இலங்கை அரசு காப்பாற்றவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் படுகொலை குறித்த போர்க்குற்ற விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்கவில்லை. இத்தகைய சூழலில் இலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன.

ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு குற்றவாளி; தண்டிக்கப்பட வேண்டிய நாடு. அத்தகைய நாட்டுக்கு இந்தியா 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவது போர்க்குற்றத்திற்கான வெகுமதியாகவே அமையும். எனவே, இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: