வாஷிங்டன்: அமெரிக்காவில் நியூயார்க் நகரை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனமானது என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீப காலங்களில் அடிக்கடி புயல் தாக்குதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்நகரை காப்பதற்காக, அமெரிக்க ராணுவம் ஆனது கடற்கரையில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள நியூயார்க் துறைமுகம் பகுதியில் பெரிய சுவர் ஒன்றை எழுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டமும் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்ட செயல்பாட்டிற்கு 11,900 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படும். இத்திட்டம் நிறைவடைய 25 ஆண்டுகள் ஆகும். இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், புயல் தாக்குதல்களில் இருந்து நியூயார்க் நகரை காப்பதற்காக அதனை சுற்றி 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பெரிய அளவிலான சுவரை எழுப்புவது என்பது அதிக பொருட்செலவு ஏற்படுத்தும். அது முட்டாள்தனமானது.