×

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 70.50 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.  தமிழ் நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ ஒழிப்பு பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து  வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த  குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு  மருந்து கொடுப்பது அவசியமாகும்.  விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.  முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் என 1,652 பயணவழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிர போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் விரிவான ஏற்பாடு
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1,438 நிரந்தர மையங்கள், ரயில், பேருந்து நிலையம், வழிபாட்டு தலம், மார்க்கெட் பகுதிகளில் 165 மையங்கள், செங்கல் சூளைகள், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் 45 மையங்கள் என்று மொத்தம் 1,645 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் நான்கு பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் செயல்படும் மையங்கள் காலை முதல் இரவு வரை செயல்படும். இதை தவிர, நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வீடு வீடாக சென்று ஆய்வு
சென்னையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் முடிந்த பிறகு,  அடுத்ததாக வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் இதற்காக, 300 முதல் 400 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வின் போது சொட்டு மருந்து வழங்கப்பட்ட வீடுகளில் x குறியீடும், வழங்கப்படாத வீடுகளில் p குறியீடும் போடப்படும். 7 ஆயிரம் ஊழியர்கள் இதில் ஈடுபட உள்ளனர். இன்று நடைபெறும் முகாம்களில் 7 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

16 ஆண்டாக போலியோ இல்லா தமிழகம்
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம், தமிழ்நாடு தொடர்ந்து 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இதை தக்க வைக்கவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும்.



Tags : Polio drip camps ,Tamil Nadu ,Target ,children ,camp , Throughout Tamil Nadu, today, polio drops, camp
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...