சென்னை: சென்னையில் மொத்தம் 132 காவல் நிலையங்கள் உள்ளன. இவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு துணை கமிஷனர் மேற்பார்வையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் காவல் நிலையங்களை சிறப்பாக பராமரிப்பதுடன், காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களை வரவேற்று, அவர்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் இன்ஸ்பெக்டர்கள் பற்றி தகவல் கொடுக்கும்படி கமிஷனர்.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார்.அதன்படி வேளச்சேரி, செம்பியம், புழல், செகரட்டரிேயட் காலனி என 4 இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 4 இன்ஸ்பெக்டர்களையும் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து கமிஷனர் விஸ்வநாதன் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதுபற்றி வேளச்சேரி இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் கூறும்போது, “வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களுக்கு வசதியாக குளுகுளு வசதியுடன் வரவேற்பு அறை அமைத்துள்ளோம். காவலர்களுக்கான ஓய்வு அறை மற்றும் காவலர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேட்மின்டன் கோட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுத்துள்ளோம். மேலும், காவல் நிலையங்களுக்கு வரும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதையும் பாராட்டி கமிஷனர் எங்களை நேரில் அழைத்து விருது வழங்கி பாராட்டியது எங்களை போன்ற அதிகாரிகளுக்கு இன்னும் அதிக உற்சாகத்தை அளித்துள்ளது” என்றார்.