சூப்பர் மார்க்கெட்டில் ரூ.2.67 லட்சம் திருட்டு: ஆசாமிகளுக்கு வலை

புழல்: செங்குன்றம் அருகே சூப்பர் மார்க்கெட்டில் ₹2.67 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை செங்குன்றம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (40). இவர், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பினார். நேற்று காலை 6 மணியளவில் சூப்பர் மார்க்கெட்டை திறக்க வந்தபோது முன்பக்க இரும்பு ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ₹2.67 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில், செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரு மர்ம நபர் பணத்தை திருடுவதும், உடன் வந்தவர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளி செல்வதும் பதிவாகியிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஓராண்டுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து, பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: