சென்னை: தமிழக பாஜ தலைவரை தேர்வு செய்ய இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும். எனவே, அதை பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுவது கண்டனத்திற்குரியது என்று கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜ அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜ கட்சியின் புதிய மாநில தலைவர் பற்றி பல்வேறு விதமான வதந்திகளும், சித்தரிப்புகளும் கடந்த பல நாட்களாக சமூக ஊடகங்களில் அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்பனை செய்து கொண்டு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவை உண்மைக்கு மாறானவை. தமிழக பாஜ மாநில தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. இதற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும். முடிவாகும் போது அந்த தகவல் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கட்சியின் சார்பில் கொடுக்கப்படும். ஆகையால் தவறான தகவல்களை தந்து நமக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.