சென்னை: தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4,073 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். டெல்லியில் நேற்று பீகார் துணை முதல்வர் சுசில் குமார் மோடி தலைமையில் நடத்தப்பட்ட அமைச்சர்களுக்கான குழு கூட்டத்தில் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் 2017-18ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கு சேரவேண்டிய வருவாய் பங்கீடு குறித்த ஆலோசணை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு தனது கருத்தை வலியுறுத்தினார்.
இதில், கோவாவில் நடந்த 37வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் 2017-18ம் ஆண்டுக்கான, தமிழகத்திற்கு சேரவேண்டிய வருவாய் பங்கீட்டு தொகையை விரைந்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கூட்டம் நடைபெறுவது குறித்து அமைச்சர் அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கோவா மாநாட்டில் வலியுறுத்தியவாறு தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4,073 கோடி தொகையை உடனடியாக விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நேற்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து தமிழகத்திற்கு சேரவேண்டிய தொகையை அளிக்குமாறு வலியுறுத்தினார்.