காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்...: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பொழுது போக்கு மையங்கள், வழிபாட்டு தலங்கள், கடற்கரை, பூங்கா பகுதிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.

சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். இவர்கள் விட்டுச்சென்ற குப்பை ஆங்காங்கே குவிந்தது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மாநகர நல அலுவலர் ஜெகதீசன் உத்தரவின்படி மெரினா கடற்கரையில் 2 முகாம்கள், பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் தலா ஒரு முகாம் என்று மொத்தம் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.  

இந்த முகாம்களில் காலை, மாலை என ஊழியர்கள் பணியாற்றினர். சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை தலைமை பொறியாளர் மகேஷன் அறிவுறுத்தலின்படி மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மெரினா கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 130 பணியாளர்கள் கூடுதலாகவும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 30 கூடுதலாகவும் பணியாற்றினர்.

தற்போது வரை மெரினா கடற்கரையில் மட்டும் 15.8 டன் குப்பையும், பெசன்ட் நகர் கடற்கரையில் 10 டன் குப்பையும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி முழுவதும் 4,500 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: