மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் நேற்று இருமுறை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்னிலையிலேயே நடந்த தடியடியால் அவர்கள் மிரட்சிக்கு ஆளாகினர்.
அலங்காநல்லூருக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று காலை 8 மணிக்கே வந்து விட்டனர். ஆனால் இவர்களை நீண்ட நேரமாக கேலரிக்கு அனுப்பாமல் போலீசார் வெளியிலேயே நிறுத்தி வைத்தனர். விஐபி பாஸ் பெற்ற முக்கிய பிரமுகர்களில் சிலரும் இவர்களுடன் சேர்ந்து காத்திருந்தனர். இப்படி 300க்கும் அதிகமானோர் காத்திருந்த நிலையில், போலீசார் தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். காத்திருந்தவர்களில் சிலர், எதிர்ப்பு தெரிவித்து தடுப்பு வேலியை தள்ள முயன்றனர். இதைக்கண்டு ஆத்திரமடைந்த போலீசார் அவர்களை கீழே தள்ளி விட்டனர். இதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆயுதப்படையினர் திடீரென நின்றிருந்த கூட்டத்தினர் மீது தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் சிதறி ஒடினர். இதனைக் கண்டு கூட்டத்திலிருந்தவர்கள் மிரட்சிக்கு ஆளாகினர். பிறகு அங்கிருந்த அதிகாரிகள் தலையிட்டு, சுற்றுலா பயணிகளை 2 மணி நேர தாமதத்திற்குப்பிறகு கேலரிக்கு செல்ல அனுமதித்தனர்.