×

ஜம்மு காஷ்மீரில் பல மாதங்களுக்கு பிறகு செல்போன் குறுந்தகவல் வசதி...:முதன்மைச் செயலாளர் அறிவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த செல்போன் குறுந்தகவல் வசதி மீண்டும் தொடங்கப்பட்டது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதனால் அந்த மாநிலங்களில் வன்முறையை தூண்டும் வகையிலான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்கும் வகையில் இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டன. இதனால் பல மாதங்களாக  ஜம்மு காஷ்மீரில் செல்போன் குறுந்தகவல் வசதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அதனையடுத்து, தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த சேவை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீரின் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் இன்று தெரிவித்தார். இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதிலும் உள்ள உள்ளூர் பிரீபெய்டு சிம் கார்டுகளுக்கு, அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் சேவை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜம்மு-வில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் காஷ்மீரில் உள்ள குப்வாரா, பந்திபோரா ஆகிய பகுதிகளில் போஸ்ட்பெய்ட் மொபைலில் 2ஜி இன்டர்நெட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் பட்டியலிடப்பட்ட வலைத்தளங்களை மட்டும் பார்க்க அனுமதி அளிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீரின் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Jammu ,Kashmir ,cell phone SMS facility ,Chief Secretary ,announcement , After several, Jammu ,Kashmir ...
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...