நாமக்கல் : நாமக்கல் அடுத்த கீரம்பூர் சுங்கச்சாவடியில் டிராக்கில் பொருத்தியுள்ள ஸ்கேனர் பழுதால், பாஸ்டேக் ஒட்டி வந்த வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. சிலர் பணம் செலுத்தி சென்ற நிலையில், பலர் காசு இல்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருப்பதை தடுக்க, மத்திய அரசு பாஸ்டேக் எனப்படும் தானியஙகி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தியது.
முன்கூட்டியே பணம் கட்டி பாஸ்டேக் வில்லை வாங்கி ஒட்டிசசெல்லும் போது, சுங்கச்சாவடியில் வானங்கள் நிறுத்தத்தேவையில்லை. எரிபொருள் மிச்சமாவதுடன், கால விரயம் தவிர்க்கப்பட்டது. இந்த பாஸ்டேக் திட்டம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வழக்கத்தில் உள்ளது. இந்த பாஸ்டேக் வில்லைகளை பெறும் வாடிக்கையாளர்கள், அவ்வப்போது ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியில் பாஸ்டேக் ஒட்டப்பட்ட வாகனங்கள் கடக்கும் போது, தானாக கட்டணத்தை, அவரது கணக்கில் இருந்து வசூலித்துக் கொள்கிறது.
இந்த நடைமுறை எளிதாக கொண்டு வரப்பட்டாலும் பெரும்பாலான வாகன ஒட்டிகளால் பாஸ்டேக் வில்லையை பெற முடியவில்லை. இதனால் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல தனியாக ஒரு டிராக் விடப்பட்டுள்ளது. நாமக்கல் அடுத்த கீரம்பூர் சுங்கச்சாவடியில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஆவணங்களை அளித்து வங்கி கணக்கு மூலம் பாஸ்டேக் வில்லையை பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில், கீரம்பூர் சுங்கச்சாவடியில் நேற்று பாஸ்டேக் வில்லை ஒட்டி வந்த வாகனங்கள், சிக்னல் கோளாறு காரணமாக ஸ்கேன் ஆகாததால் செல்ல முடியவில்லை. சில டிராக்குகளில் ஒரு சிலரின் பாஸ்டேக் வில்லைகள் மட்டும் ஸ்கேன் ஆனது.
இதனால் வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி, சாதாரண கவுண்டரில் பணம் செலுத்தி கடந்து சென்றனர். ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து வந்த சரக்கு லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பாஸ்டேக் வேலை செய்யாததால் அங்கிருந்த ஊழியர்களிடம், தங்களிடம் பணம் இல்லை. எனவே, வேறு டிராக்கில் ஸ்கேன் செய்து அனுப்பும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பணம் கட்டி செல்லும் டிராக்கில் ஏராளமான வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. பாஸ்டேக் ஒட்டிய வாகனங்கள் செல்லும் டிராக்குகள் அனைத்தும் காலியாக வெறிச்சோடியது. பின்னர் வேறு வழியின்றி பணத்தை கட்டி, வாகனத்தை எடுத்துச்சென்றனர். முன்கூட்டியே பணம் கட்டி வாங்கி பாஸ்டேக் வில்லை ஒட்டியும், சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாததால் டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.