உயிரை பலிவாங்கும் புதிய வைரஸ் தாக்குகிறது சீனா சென்றால் ‘பி கேர்புல்’: மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: ‘சீனாவில் சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் நச்சுக் கிருமி வேகமாக பரவி வருவதால், அங்கு செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாமிசம் சாப்பிடவேண்டாம்,’ என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சீனாவில் ‘கொரனோ வைரஸ்’ என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்குள்ள மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனால், கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. கடந்த 11ம் தேதி நிலவரப்படி இந்நாட்டில் ஒருவர் பலியாகி இருக்கிறார்.  41 பேர் கடும் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவில் ‘கொரனோ வைரஸ்’ என்ற நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது. அது எவ்வாறு பரவுகிறது என கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும், சீனாவுக்கு பயணம் செய்பவர்கள் அங்கு உடல் நலமின்றி காணப்படுபவர்களுடன்ெநருக்கமாக இருப்பதை தவிருங்கள். குறிப்பாக ஜலதோஷம், சளி ஒழுகும் மூக்குடன் இருப்பவர்களின் அருகில் போகாதீர்கள்.  மேலும், உங்களுக்கு சுவாச பிரச்னை இருந்தால் முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுங்கள். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சீனாவின் யுஹைன் நகருக்கு பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சீனாவில் இருந்து திரும்பும்போது உடல் நலமின்றி காணப்பட்டால் இது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை

சீனாவில் புதிய வைரஸ் கிருமி பரவி வருவதால், அங்கு சென்று வரும் சுற்றுலா பயணிகளால் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சீனா சென்று திரும்பும் அல்லது சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ சோதனைகள் நடத்தும்படி மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நான்வெஜ் சாப்பிடாதீங்க...

மத்திய சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும், ‘சீனா செல்லும் இந்்தியர்கள் அங்குள்ள பண்ணைகள், உயிருள்ள விலங்குகள் விற்கப்படும் சந்தைகளுக்கு செல்ல வேண்டாம். மேலும், அங்கு வெட்டப்படும் மிருகங்களை சமைக்காமலோ, சமைத்தோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்,’ என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: