×

சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி ஆசிரியை கணவருடன் கைது

ஆவடி: ஆவடி, ராம் நகர், 4வது தெருவில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 6 வயது மகள், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமியும் அவரது தம்பியும் தாங்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் விஜயலட்சுமி (30) என்பவரது வீட்டுக்கு டியூசனுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி டியூசனுக்கு சென்ற சிறுமியை விஜயலட்சுமியின் கணவரும், ஆட்டோ டிரைவருமான நரேஷ் (37) என்பவர் நைசாக பேசி அழைத்து சென்றுள்ளார். பின்னர், அவர் தனது வீட்டு பாத்ரூமில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தெரிந்த விஜயலட்சுமி, யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டி சத்தியம் வாங்கி அனுப்பியுள்ளார்.

இச்சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். இது குறித்து பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் நரேசையும், உடந்தையாக இருந்த ஆசிரியை விஜயலட்சுமியையும் நேற்று மாலை கைது செய்தனர். மற்றொரு சம்பவம்: மணலி புதுநகரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. செங்குன்றம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமிக்கு பழவேற்காடு காரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சுடர்மணி (19) என்கிற டிரைவருடன் கடந்த 2018ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த பெற்றோர், சிறுமியை ஆவடி அடுத்த பட்டாபிராம், உழைப்பாளர் நகரை சேர்ந்த உறவினரின் வீட்டில் கடந்த மாதம் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து அவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி தனது காதலன் சுடர்மணியுடன் சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நெமிலிச்சேரி மேம்பாலம் அருகில் சிறுமியை விடுவதற்காக சுடர்மணி வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் சுடர்மணியை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டு இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் திருமணம் செய்வதாக ஆசை காட்டி சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் சுடர்மணி  பலாத்காரம் செய்துள்ளார். இதன் விளைவாக சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து சுடர்மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : School teacher ,sexual harassment ,arrest , girl, sexual harassment, school teacher, husband, arrest
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...