புதுடெல்லி: அரசு போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டத்துக்கு, இன்னும் போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவுக்கு, மத்திய அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநலன் வழக்கு மையம் சார்பில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காற்றில் மாசுவை கட்டுபடுத்துவதை தடுக்க, அரசு போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. பேட்டரிகளை முறையாக ரீசார்ஜ் செய்யும் வசதிகளை மேம்படுத்தப்படுத்த வேண்டும். இத்திட்டத்துக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.